துடித்துப் போனாள்,துர்கா..!

வீட்டுக்கு வந்து சேரவே இரவு 10:30 மணி ஆனது;அடுத்து பிரசாத்துடன் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பல காரியங்கள் பேசி ஜெபித்து முடித்து கணிணியில் சொந்த
குறிப்புகளைப் பதித்துவிட்டு இன்று மாலை நான் கலந்துகொண்ட வீட்டுக்கூட்ட செய்தியின் குறிப்பை கட்டுரையாக்கி எனது தளத்தில் பதித்தேன்; இதனை முடிக்கவே விடிந்துவிட்டது;
படுக்கச் செல்லும் போது காலை 05:30 மணியானது;

எழுந்திருக்கும் போது மதியம் 1மணி;தூக்கத்தைத் தொடர்ந்தேன்; இப்போது 2மணி; நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்றதொரு தூக்கம்;

எனது தாயார் போன் செய்து சத்தம் போட்டார்களாம், நான் ஏன் போனை எடுக்கவில்லையென.

பிறகு எனது கைபேசியை எடுத்துப் பார்த்து அதிர்ந்துபோனேன்; அதில் 42 தவறவிட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தது;

துர்கா மட்டுமே 14 முறை முயற்சித்திருக்கிறாள்; நேற்று காலையும் இதேபோல நான் காலை 4 மணிக்கு படுத்திருந்ததால் நான் தூக்கக் கலக்கத்தில் சரியாகப் பேசவில்லை;

இன்று காலையிலிருந்தும் நான் போனை எடுக்காததால் பயந்துபோய் வீட்டு நம்பருக்கு தொடர்பு கொள்ள நானே எடுத்தேன்; இப்போது சொல்கிறாள்,ரொம்ப நாள் ஆனது போலிருக்கிறது, உங்களுக்கு உடம்பு சரியில்லையா, என;

பிறகு சமாளித்து எனது சில தனிப்பட்ட அசௌகரியங்களைச் சொன்னேன்; மற்றவருக்காக ஜெபிக்கும்போது நமது சரீரத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பில்லிசூனிய கட்டுகளிலிருப்போருக்காகப் போராடி ஜெபிக்கும்போது நமக்கு ஏற்படும் உபத்திரவங்களையும் கூறினேன்; ஆச்சரியப்பட்டாள்;

‘நீங்க ரொம்ப கிரேட் ஸார்’ என மனதாரப் பாராட்டினாள்; ஆவி உலகம் சம்பந்தமான மற்றும் சில உண்மைகளையும் எளிமையாகச் சொன்னேன்;

ஒவ்வொரு மனிதனும் நன்மையான அல்லது தீமையான ஏதோ ஒரு ஆவியினால் ஆளப்படுகிறான்; இதில் நன்மையான ஆவியினால் ஆளப்படுவோர்க்கு நன்மைகளும் தீய சக்திகளால் துன்பங்களும் உண்டாகிறது;

தீயசக்தியினால் துன்புறுவோர் தேவைக்காக நாம் அடுத்த வீட்டிலிருப்போரிடம் உதவி கேட்பது போல பிரார்த்தனை செய்ய நம்மிடம் வருவார்கள்;

அவர்களுக்கு உதவி செய்யும்போது தீயசக்திகளின் எரிச்சலுக்கு
நாமும் ஆளாக நேரிடும்; ஆனாலும் நாம் பயப்படப்போவதில்லை; அவற்றை அழிக்கவே ஆண்டவர் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்;

‘உனக்காக யுத்தம் செய்வேன்’ என்கிறாரே,எப்படி?
இதுபோல பிரார்த்தனை செய்பவர்கள் மூலமே நமக்கு விடுதலை வருகிறது; ஏனென்றால் இந்த உலகில் வாழும் நம்முடைய போராட்டங்களை நாமே மேற்கொள்ளும் வழிமுறைகளையும் அதற்கான ஆயுதங்களையும் ஆண்டவர் ஏற்கனவே நம்மிடம் கொடுத்துவிட்டார்;

இப்படியாகச் சொன்னவுடன் தெளிவடைந்த துர்கா, ‘சரி நீங்க தூங்குங்க நான் சாயங்காலம் அழைக்கிறேன்’ என்றாள்;
நானோ, ‘இப்போதே ஜெபிக்கிறேன், மாலையில் என்னுடைய நிலை எப்படியிருக்குமோ’ என்று பிரார்த்தனை செய்தேன்;

ஜெபத்துக்கு முன்பாக கீழ்க்காணும் வாக்கியம் ஆவியில் உதித்தது,
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”(சங்கீதம்.37:4)

இதிலிருந்து நான் சொன்ன சில தத்துவங்கள் எனக்கே பாடமாக இருந்தது;

“இருதயத்தின் வேண்டுதல்களை” என்ற வார்த்தையின் மூலம் நாம் அறிவது என்ன?

ஒவ்வொரு ஆத்துமாவின் இருதயத்திலும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட விருப்பங்கள் உருவாகிறது; அந்த விருப்பங்கள் நிறைவேறிவிட்டால் பிரச்சினையில்லை; ஆனால் அவை தாமதிக்கும் போது ஏக்கமாக உருமாறுகிறது; ஏக்கமே விரக்தியாக சோர்வாகவும் மனச் சோர்வாகவும் மன அழுத்தமாகவும் மன நோயாகவும் மாறி மனிதனை நடைபிணமாக்குகிறது;

ஆனால் ஆண்டவர் இதற்கு எளிமையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார்; இதனையறிந்து நடைமுறைப்படுத்தினால் விடுதலை உண்டாகும்;

ஏன் நாம் ஆண்டவரிடம் செல்ல சங்கடப்படுகிறோம்?
நமக்கு அவர் மீது நல்ல எண்ணமிருந்தும் நாம் ஏன் அவரை ரெண்டாம் பட்சமாக வைத்திருக்கிறோம்?

காரணம், நம்முடைய பெற்றோர் அல்லது நண்பர்கள் நாம் ஒரு தவறான காரியத்தில் ஈடுபடும் போது அதன் எதிர்கால ஆபத்தினை தங்கள் அனுபவத்தினால் உணரும் அவர்கள் நம்மைத தடுப்பார்கள், தேவைப்பட்டால் கண்டிப்பார்கள்;

ஆனாலும் நாம் மாற்றுவழிகளை ஏற்படுத்திக் கொண்டு
அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழிகளைத் தொடருவோம்; இதன் விளைவாக நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்போது நாம் யாரிடம் உதவி கேட்போம்? புதிய ஆட்களிடமே;அவர்கள் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்துவார்கள்;

நாம் நம் மீது உண்மையான அக்கறை கொண்டோரிடம் செல்லுவதில்லை; ஏனெனில் அவர்களை மீறி நாம் வந்ததால்
உண்டான அவமானம் நம்முடைய உள்ளத்தில் மாறாத வடுவாகப் பதிந்துள்ளது;

ஆனாலும் நம்மீது மெய்யான அன்பு கொண்ட நம்முடைய உறவு தனக்கு எவ்வளவு நஷ்டம், அவமானம் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு வந்து நம்மை மீட்டுச் செல்லும்; இதுபோலவே இயேசுகிறிஸ்துவும் நம்மைத் தேடி நாம் பாதிக்கப்பட்டு கண்ணீரில் மிதக்கும் இடத்துக்கே வந்து நம்மை சந்திக்கிறார்; விடுதலையும் செய்கிறார்..!

இதையெல்லாம் சொல்லி ஜெபித்ததும் துர்கா சாட்சி கூறினாள்; அண்மையில் தான் வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி தூக்கி எறியப்பட்டு குப்புற விழுந்தும் ஒரு காயமும் இல்லாமல் தப்பினாளாம்; அவளது தோழி சொன்னாளாம், “பரவாயில்லையே,அந்த ஜீஸஸ் தான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறார்” என்று.

One thought on “துடித்துப் போனாள்,துர்கா..!

Leave a comment