ஷீலா,ஆதரவற்ற பரிதாபத்துக்குரிய பெண்;சொந்தங்கள் இருந்தும் கரிசனையற்றவர்களாக இருக்க, மனநிலை சரியில்லாத தாய் ஊரில் பாட்டியின் ஆதரவில் இருக்க, சிறுவயதிலேயே ஓடிப்போன அப்பா , எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமில்லாத இளம்பெண்.
ஆனாலும் தன் சொந்த துக்கங்களை மனதில் புதைத்துக்கொண்டு, ஒரு இயந்திரம் போல, இங்கே ஒரு விடுதியில் தங்கி சொற்ப சம்பளத்தில் ஏதோ ஒரு அலுவலகப் பணியில் இருக்கிறாள்;சம்பளம் முழுவதும் பெரும்பகுதி ஊரில் அம்மாவை கவனித்துக்கொள்ளும் பாட்டிக்கும், தனது விடுதிக்கும் செலுத்திவிட்டு 27 வயதாகும் தன்னுடைய திருமணத்துக்காகத் தானே கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வருகிறாள்.
அவளுக்கு அலுவலகத்திலிருந்து வற்புறுத்தி கொடுக்கப்பட்ட க்ரெடிட் கார்டு மூலம் எந்த நன்மையும் இராதிருந்தும் தொல்லைகள் அதிகம் இருந்ததால் அதனை ரத்து செய்ய அண்மையில் முடிவுசெய்து அதற்கான சேவை அலுவலகத்துக்குச் சென்றாள்;
அங்கேயிருந்த பணிப்பெண், “க்ரெடிட் கார்டு “ மாத்திரமல்ல, அதன் இரகசிய (PIN No. )எண்ணும் இருந்தாலே அதனை கணக்கு சரிபார்த்து ரத்து செய்ய முடியும் சூழ்ச்சியுடன் சொல்ல , இந்த அப்பாவிப் பெண் தன் க்ரெடிட் கார்டின் இரகசிய PIN எண்ணையும் ஒப்புவித்துவிட்டு தன் அலுவலகத்துக்கு வந்துவிட்டாள்; அன்றிரவே அவளது கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் (Sms) வருகிறது, அவளது க்ரெடிட் கார்டிலிருந்து ரூபாய் 27,000/ -க்கு பொருள் வாங்கப்பட்டிருப்பதாக.
அதிர்ச்சியடைந்து உடனே வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டால் சரியான பதில் கிடைத்தபாடில்லை; பதட்டத்துடன் இரவெல்லாம் தவித்துபோய் காலையில் வங்கிக்குச் சென்று புகார் செய்யப்போனால் அவளுக்கு யாரும் பொறுப்பான பதில் சொல்லவில்லை;க்ரெடிட் கார்டை இரத்து செய்ய பெற்ற (திருட்டுப்) பணிப்பெண்ணும் அலுவலகத்துக்கு வரவில்லை;
ஷீலா வேறு வழியில்லாமல் தனது உறவினர்களைத் தொடர்பு விஷயத்தைச் சொல்லவும் ,அவர்கள் வங்கி அதிகாரிகளைக் கூப்பிட்டு மிரட்டவும், மிகத் தாமதமாக சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட அவர்கள் அடுத்து இந்த விஷயத்தை விவகாரமாக்காமல் மூடிமறைக்கும் சூழ்ச்சி வலைகளைப் பின்னத் துவங்கினார்கள்;
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சட்டப்பூர்வமான நடவடிக்கை மன்றத்துக்குச் செல்லுவதைத் தடுத்து, இவர்களே விசாரணை அது இதுவென்று இதோ இழுத்து ஒரு வாரம் ஓட்டிவிட்டார்கள்; இந்த ஒரு வாரமாக ஷீலாவுக்கு அனுதாப விசாரிப்புகள், புத்திமதிகள், பரியாசம் போன்ற துன்பங்களுடன் வங்கியிலிருந்து விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காமல் சிறப்பு அனுமதி (Permission) யும் கிடைக்காமல் இப்படி பல்வேறு மன உளைச்சல்…மன அழுத்தம்..!
இனி இழந்துபோன அந்த 27,000/- ரூபாய் கிடைத்தாலும் இந்த துன்பங்களுக்கெல்லாம் யார் ஈடு செய்யமுடியும்? தற்போதய நிலவரத்தில் வங்கி அதிகாரிகள் அந்த திருட்டுப் பெண்ணுக்கு பரிந்துபேசி, “நாங்க அவசரப்பட முடியாது’ம்மா, அந்த பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை ஏதாவது செய்துகொண்டால் பிரச்சினையாகிவிடும் “ என்கிறார்களாம்.
வேதம் சொல்லுகிறது,
“நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.” (உபாகமம்.28:12 );
இந்த வசனத்தின் ஆசீர்வாதத்தைக் குறித்த மேன்மை தெரியாத பலரும் இப்படியே சாத்தானின் திட்டங்களுக்கு பலியாகின்றனர்; கடன் வாங்குவதை அவமானமாக எண்ணியது ஒரு காலம்; இன்று க்ரெடிட் கார்டு இல்லாதிருந்தால் அவமானம் என்று நினைக்கும் நவீன காலம்.
இந்த பாழ் உலகின் மாயையில் சிக்கி ஆதியில் கடவுள் மனிதனை உண்டாக்கி அவனை கவலையற்றவனாக வைத்து பராமரித்த தயவை மறந்த மனிதன், தன் விருப்பத்துக்கு ஏற்ற உலகைத் தானே அமைத்துக்கொண்டான்; அதன் விளைவுகளே இன்று மனிதனை ஆட்டிப்படைக்கிறது; ஆசையையும் அவசரத்தையும் ஒழிப்பதே துன்பத்திலிருந்து நீங்கும் வழியாகும்; அதனையடைய கொஞ்சம் சுயகௌரவத்தை விட்டுவிட்டு சிருஷ்டிகரும் மீட்பருமாகிய இயேசுகிறித்துவைச் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்கு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்.