அண்மையில் ஒரு பள்ளி விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தேன்;அங்கு மேடையில் நடந்தவற்றை மாணவர்களும் பெற்றோருமாகக் கூடியிருந்தோர் யாரும் கவனிக்காவிட்டாலும் நான் சற்று சிரமத்துடன் உற்று கவனித்தேன்;
வரவேற்பு மற்றும் விளக்கேற்றி முடித்ததும் ஒரு இளம் ஆசிரியை உணர்ச்சிகரமாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததை கவனித்தேன்;அது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களது பிரபலமான கருத்துக்களையொட்டியதாம்;
அதனைக் குறிப்பெடுத்து இணையத்தில் தேடியெடுத்து எனது வாசகருக்காகப் படைக்கிறேன்;
சுருக்கமான இந்த தகவல் சார்ந்த தழுவல் கட்டுரைக்குக் கொடுத்துள்ள தொடுப்புடன் இதனை முழுவதும் விவரமாகத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கவும் முயற்சிக்கிறேன்;
இதிலுள்ள நிறைகுறைகளை வாசக நண்பர்கள் தெரிவிக்கவும் வேண்டுகிறேன்;இனி…
ஞானத்தை விரும்பாதவர் இந்த உலகில் யாருமில்லை; அது மிகவும் உயர்ந்ததும் ஆன்மிகம் சம்பந்தமானதுமானதாகத் தோன்றினாலும் அறிவடைய விரும்பாதோர் யாருமில்லை;
அறிவு என்பதன் ஆதாரங்களாக மூன்று கருவிகள் விளங்குகின்றன;
1. படைப்புத்திறன் 2. நெறிசார் நீதி 3. நெஞ்சுரம்
1. படைப்புத்திறன்:
புதியனவற்றை நுணுக்கமாக சிந்தித்து செய்திட கற்றல் உதவுகிறது; கற்றலில் முக்கியப் பங்காற்றுவது வாசித்தலே; ஆம்,வாசித்தல் என்பது படிப்பதல்ல; கற்கும் வண்ணமாக வாசித்தல் வேண்டும்; கற்பதற்கு ஏதுவானதை வாசிக்கவேண்டும்;
படைப்புத்திறனே சிந்திப்பதை ஊக்குவிக்கிறது; சிந்தித்தல் அறிவைத் தர, அறிவுடைமையே ஒருவனைப் பெரியவனாக்குகிறது.
2. நெறிசார் நீதி
வாய்மையைச் சார்ந்துக்கொண்ட மனமே நீதியுடைத்ததாகும்; அதுவே குணத்தின் அழகுமாகும்; அழகான நற்குணசாலிகளால் இல்லத்தில் ஒற்றுமை விளங்கும்; இதனால் தேசத்தின் ஒழுங்கும் உலகில் சமாதானமும் நிலைத்திருக்கும்.
3. நெஞ்சுரம்
படைப்புத் திறனும் நெறிசார் நீதியையுமுடையோர் வித்தியாசமானதைச் சிந்திக்கும் மனவலிமையுடையோராவார்;
புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் உடையோராவார்;
வெளிப்படுத்தப்படாத புதிய பாதையில் பயணிக்கும் ஆற்றலையும் பெற்றிருப்பார்;
இயலாதவற்றையும் கண்டுபிடிக்கும் தைரியமும் தடைகளைத் தகர்த்து வெற்றி பெறும் வைராக்கியத்தையும் அடைந்திருப்பார்.
அறிவையடைதலுக்கு ஆதார அம்சங்களான இம்மூன்று தன்மைகளையும் பெற்று வெற்றிபெறும் வாய்ப்பு இளைஞர்களுக்கே அதிகமுண்டு;
அறிவையடைவீர்…வெற்றி பெறுவீர்..!