நாங்கள் அந்த குறிப்பிட்ட குடிசையை விட்டு வெளியேற சற்று முன்பதாக பூமி அதிருகிறது;அது மின்தூக்கி (lift)யில் செல்லும்போது ஏற்படும் அதிர்வைப் போல இருக்கிறது; எனவே எந்த பொருளையும் எடுக்கமுடியாத நிலையில் அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறுகிறோம்; ஆனாலும் நான் மட்டும் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன்;எனது கணிணி மற்றும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் வீட்டிலேயே விட்டு விட்டு அவசரமாக வெளியேறுவதால் ஏதாவதொரு விலைமதிப்புள்ள பொருளையாவது எடுக்கலாமே என்று யோசிக்கும்போதே வானத்தில் போர் விமானம் ஒன்று வட்டமிடுவதைக் காண்கிறேன்.
அப்போதும் கூட என் மனதில் என்ன தோன்றுகிறதென்றால் என்னை அரசாங்கம் மிரட்டவே செய்யும், என் வீட்டின் மீது குண்டு போடாது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்;ஆனால் பயங்கரம் என்னவென்றால் வானத்தில் வட்டமிட்ட போர் விமானம் குண்டு போடத்துவங்கிவிட்டது ;அந்நேரத்தில் கூட நான் யோசிக்கிறேன்,அந்த குண்டுகள் தரையைத் தொடுவதற்கு முன்பு தீப்பிடித்த வீட்டுக்குள் சென்று எடுத்துவருவதைப் போல “ரிஸ்க்” (risk) எடுத்து ஏதாகிலும் ஒரு பொருளை, முக்கியமாக எனது கணிணியை மட்டுமாவது எடுத்து வந்துவிடலாமா, என்று.
ஆனால் நான் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோதே பயங்கரமான அந்த காட்சியைப் பார்த்து விக்கித்து நின்று விட்டேன்; வானத்தில் என் கண்ணுக்கு எட்டிய சுற்றளவில் ஆயிரக்கணக்கான குண்டுகள் எரிகற்களைப் போல பரவிக் கிடக்கிறது,அவை உடனே விழவில்லை,ஆனால் மெதுவாக இறங்கிக்கொண்டே இருக்கிறது,சிலது மத்தாப்பு போல பிரகாசமாக வந்தும் அந்தரத்திலேயே அணைந்தும் போகிறது; நானும் என் குடும்பமும் எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த எரிகின்ற குண்டுகளுக்குத் தப்பி எங்கும் ஓடமுடியாது எங்கே ஒடினாலும் அதில் ஏதோ ஒன்று எங்களை அழித்துபோடும். பதுங்குகுழிகளைப் பற்றிய தகவலோ எண்ணமோ இருக்கவில்லை; எங்களைச் சுற்றிலும் எந்த மனித சஞ்சாரமுமில்லை;என் மனைவியும் மகளும் மகளும் சாலையோரமாக ஏதோ ஒரு மறைவிடத்தை நோக்கி ஓட நான் என்னுடன் இருக்கும் எனது தங்கை மகனைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கவும் தைரியமில்லாமல் “ஆண்டவரே” எனக் கதறிக்கொண்டே சாலையின் மத்தியில் நிற்கிறேன்.
வழக்கமாக இதுபோன்ற கனவுகளின் உச்சக்கட்டத்தில் தோன்றுவது போல நாம் தான் வீட்டுக்குள் பத்திரமாக இருக்கிறோமே, இது நிச்சயமாக கனவாகத் தான் இருக்கவேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து கனவுதான் என்ற நிச்சயத்துடடனும் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தேன்.
இந்த கனவுக்கு மற்ற போதகர்களைப் போல ஏதேதோ மிகைப்படுத்தப்பட்ட விளக்கங்களைக் கொடுக்க எனக்குத் தெரியாது; இந்த பதட்டமான கனவின் பொருள் எதுவாக இருந்தாலும் எனது மனத் திரையில் உடனே தோன்றியது, இலங்கைத் தமிழர்களின் அவலநிலை தான்; சொந்த அரசாங்கத்தின் பகையாளிகளாக- தங்களைப் பாதுகாக்க வேண்டிய நிர்வாகத்தின் நாசகாரக் கரங்களாலேயே அழிக்கப்பட்ட கொடுமை வானத்தின் கீழே எந்த சமுதாயத்துக்காவது நிகழ்ந்திருக்குமா?
அகதிகளுக்கே தேசக் குடிகளைவிட அதிகமான கரிசனையெடுத்து உணவு உடை மற்றும் இருப்பிடத்தையும் பாதுகாப்பையும் தரவேண்டியது ஒரு அரசாங்கத்தின் மாண்புக்கு அடையாளமாகும்;ஆனால் இலங்கை அரசாங்கம் எம் தமிழ் மக்களை கொத்தடிமைகளைவிட கேவலமாக நடத்தி வருவதும் அதனை ஊடகங்களில் எடுத்துச் செல்லும் தன்னார்வத் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது; சொந்த தேசத்திலேயே அகதிகளாக்கப்படும் கொடுமை இந்த நவநாகரீக உலகிலும் தொடரத்தான் வேண்டுமா?
எரிகுண்டுகள் என்றும் கொத்துக்குண்டுகள் பற்றி இங்கே நம் தமிழ் ஆர்வலர்கள் மேடை போட்டு பேசும்போது அதன் தீவிரத்தை நாம் அறிந்தோமில்லை;ஆனால் அந்த பயங்கரத்தின் காட்சி என் மனதில் எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது என்றே புரியவில்லை;அதுபோன்ற யுத்த பூமியில் வாழ்ந்த அனுபவமும் எனக்கில்லை;சொப்பனமே இத்தனை கொடூரமாக இருக்கும் என்றால் நிதரிசனம் எப்படி இருந்திருக்கும்..? இதுபோன்ற கனவெல்லாம் இராஜபக்ஷே போன்ற மனித மிருகங்களுக்கும் நம்ம ஊர் அரிசியில்வியாதிகளுக்கும் வராதா..?
இலங்கைத் தமிழருக்காகப் பரிதபிப்போம்..!
இன்னும் கொடுமையான படங்களைக் காண மனோதைரியம் இருந்தால் தொடுப்பைத் தொடரவும்.
{இன்று காலையில் கலக்கத்துடன் எழுந்தேன்;காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகு மறக்கமுடியாத ஒரு கனவும் அது தொடர்பான சிந்தனையும்…}