பாடகி சித்ராவின் மகள் துபை விபத்தில் மரணம்

துபை, ஏப்,14: பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ராவின் 8 வயது மகள் நந்தனா துபையில் இன்று உயிரிழந்தார்.சித்ரா மற்றும் அவரது கணவர் விஜயசங்கருக்கு நந்தனா ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.துபையில் எமிரேட்ஸ் ஹில்ஸில் அவர்கள் தங்கி இருந்தபோது நீச்சல் குளத்தினுள் நந்தனா தவறி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சித்ரா தனது குடும்பத்தினருடன் துபை சென்றிருந்தார். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.அந்த நிகழ்ச்சியின் ஒத்திகைக்கு செல்வதற்காக இன்று காலை சித்ராவும், அவரது குடும்பத்தினரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில் தாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்கதவு திறந்திருப்பதும், மகள் நந்தனா வீட்டில் இல்லாததும் அவர்களுக்கு தெரியவந்தது.பின்னர் வெளியே தேடிப்பார்த்தபோது, நீச்சல் குளத்தில் நந்தனா மிதந்தபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீச்சல் குளத்தில் இருந்து நந்தனாவை வெளியே கொண்டு வந்து ஜேபெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் நந்தனா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.சம்பவம் நடந்தபோது சித்ராவும் வீட்டில்தான் இருந்துள்ளார். எனினும் அனைவரும் வேலைகளில் மும்முரமாக இருந்தபோது நந்தனா யாருடைய உதவியும் இல்லாமல் வெளியே சென்றதாகத் தெரிகிறது.குழந்தைகளுக்கு பெரிதும் பரிச்சயமில்லாத அந்த இடத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நந்தனா தவறி விழுந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.நந்தனாவின் உடல் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.நந்தனாவின் மரணம் தொடர்பாக துபை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கண்ட செய்தி தினமணி நாளிதழில் வெளியாகியுள்ளது; நவநாகரீக உலகில் குழந்தைகள் விஷயத்தில் பெரியவர்கள் எவ்வளவு அக்கறையில்லாமல் இருக்கிறோம் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணமாகும்;இதோ ஏதோ விதியினால் நிகழ்ந்த ஒரு சம்பவம் அல்ல;ஒரு பொது இடத்தில்கூட ஒரு உயிருக்கு ஒரு குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை;அந்த அளவுக்கு கண்காணிப்பு பெலவீனமாக இருக்கிறது என்பது தெரியவருகிறது; இதுபோன்ற செய்திகள் சம்பந்தப்பட்டவர்கள் பிரபலமானவர்களாக இருப்பதால் நம்முடைய கவனத்துக்கு வந்தது; ஆனாலும் இதுபோன்ற நிகழ்வுகள் அன்றாடம் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது;சில குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்;சில குழந்தைகள் மனோரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்;சில குழந்தைகள் பெரியவர்களின் அஜாக்கிரதையால் இதுபோன்ற விபத்துகளில் சிக்கிக்கொள்ளுகின்றனர்.இந்த உலகில் மனிதன் நோக்கமில்லாதவனாகவும் மாயையைத் தொடருபவனாகவும் ஓடிக்கொண்டிருப்பதால் தேவையானதை விட்டுவிட்டு தேவையில்லாதவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அதிமுக்கியமானவை நம்மை விட்டு கடந்துபோகிறது; அதில் மிகமிக விசேஷமானது ஒரு மனித உயிர்;உதாரணமாக பாடகி சித்ரா ஒருவேளை அந்த கொடிய நிமிடங்களில் தன் மகளுடன் இருந்திருந்தால் அந்த பிஞ்சு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்;ஒரு தாயைவிட ஒரு குழந்தைக்கு யாரால் பாதுகாப்பு கொடுக்கமுடியும்? ஆனால் பரபரப்பான இந்த உலகில் பணம் என்ற காகிதத்துக்காகவும் புகழ் என்ற மாயைக்காகவும் விலைமதிப்பில்லாத உயிர்களின் மீது கரிசனை இல்லாதுவிட்டது பெருந்துக்கமாகும்.
உயிர்களின் படைப்பாளியான ஆண்டவர் சொல்லுகிறார்,
- “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மத்தேயு.16:26)
பாடகி சித்ராவின் புகழ் அவருடைய குழந்தைக்கு உயிர் தருமா? அல்லது அவர் நஷ்டப்படுத்திய அவரது குழந்தையின் உயிர் தியாகமாக எண்ணப்படுமா?
உலகத்தீரே சிந்தை கொள்வீர்… பணம், பேர், புகழ் ஒருபோதும் நிலைத்திராது; கடவுளுடைய அன்பு உங்கள் உள்ளத்தில் நிறையுமானால் அவர் எல்லா தீங்குக்கும் உங்களை விலக்கி காப்பார்.
- “கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.” (சங்கீதம்.121:7)
குழந்தை நந்தனாவின் ஆன்மாவானது எந்த சேதாரமுமின்றி இறைவனடி சேர்ந்தது என்பதில் ஐயமில்லை;ஆனால் அந்த குழந்தை இந்த உலகில் குறிப்பிட்ட காலம் வாழுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் மனித தவறே,விதியல்ல;ஆனாலும் மனிதன் இறைவன் மீதே குற்றஞ்சாட்டுவான்.
- “மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.”(நீதிமொழிகள்.19:3)