வெறும் 350 ரூபாயுடன் மதுரைக்கு செல்ல ஒருவன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தானாம்; பஸ்ஸுக்கு 300 ரூபாய் ஆனாலும் மீதம் இருக்கும் 50 ரூபாயில் கொஞ்சம் தண்ணி போட்டுக்கொண்டு மீதப்பணத்தில் ஏதாவது சாப்பிட்டு வண்டியேறி விடலாம் என எண்ணி கடைகளை நோட்டம் விட்டான்; அங்கே ஒரு ஓட்டல் வாசலில் பிரம்மாண்டமான ஒரு அறிவிப்பு…“இங்கே உணவு உட்கொள்ளுபவர்களிடம் பணம் வசூலிக்கப்படாது,அத்தனையும் இலவசம், உங்கள் பேரன் காலத்தில் அந்த கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும் ” என்றது;
நம்முடைய பயணி ஆச்சர்யத்துடன் நன்கு விசாரித்து உறுதிபடுத்திக்கொண்டு நம்முடைய பேரன் காலத்தில் தானே பணத்தை வசூல் செய்யப்போகிறார்கள் என்ற தெம்பில் வயிறுமுட்ட மூக்குபுடைக்க சாப்பிட்டானாம்; அவன் எண்ணம் என்னவென்றால் தனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை; அப்படியே கல்யாணம் ஆகி பிள்ளை பிறந்து அதற்கு கல்யாணமாகி அதற்கு பிறப்பது பேரனாக இருந்து அவன் வளர்ந்து பெரியவனாகி சம்பாதிக்கத் துவங்கி இந்த வழியாக வந்தால் தானே இங்கே பணம்கட்ட வேண்டிவரும்; அப்படியே அவன் பணம் கட்ட சிரமப்படும் நிலைவராதிருக்க நாம் இப்போதிருந்தே சம்பாதித்து பெரும்செல்வந்தனாகிவிட்டால் பிறகு பேரனுக்கு இந்த ஓட்டல் பாக்கியை செலுத்துவது பெரிய சிரமமாக இருக்கப்போவதில்லை’ என்று நினைத்தான்;
சாப்பிட்டு முடித்து கைகளை அலம்பி துடைத்துக்கொண்டே சீரணத்துக்காக கொஞ்சம் இனிப்பூட்டப்பட்ட பெருஞ்சீரகத்தை (சோம்பு) வாயில் போட்டு மென்று கொண்டே பணம் செலுத்துமிடத்தில் இருந்த பெரியவரிடம் ஓட்டல் ருசி மற்றும் வியாபார நுணுக்கத்தை பாராட்டியவாறே வெளியே செல்ல எத்தனித்த போது ஒருவர் தடுத்தார்,“சார்,நீங்கள் பணம் கட்டாமலே போறீங்களே ” என;
நம்ம பயணி அதிர்ச்சியுடன்,” சார் நீங்கள் தானே நான் சாப்பிடும் பணத்துக்கு என் பேரன் காலத்தில் பணம் செலுத்தினால் போதும் என்று போர்டு போட்டிருக்கிறீர்கள் “ என்றான்;
தடுத்த நபரோ பயணியை நோக்கி, “நீங்கள் போர்டை நன்றாக கவனித்துப்பாருங்கள் ஐயா,இந்த ஓட்டல் 200 வருடமாக நடைபெற்று வருகிறது;நீங்கள் சாப்பிட்டதற்கு உங்கள் பேரன் பணம் தருவான் என்பது உண்மைதான்,அப்படியானால் உங்கள் தாத்தா சாப்பிட்டதற்கு நீங்கள் பணம் கட்டவேண்டுமே “ என்றார்;
நம்ம பயணி நடுக்கத்துடன், ‘ நான் அவ்வளவு பணம் கொண்டு வரலையே, என் தாத்தா எவ்வளவு பாக்கி வெச்சுருக்காரு ‘ என்று விசாரிக்க அது இவன் சாப்பிட்டதற்கான பில்லை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்க அதிர்ந்துபோனான்; தான் வகையாக சிக்கிக்கொண்டோம் என்று புரிந்ததும் வேறு வழியில்லாமல் கைகளில் மோதிரம் கழுத்திலிருந்த செயின் இடுப்பிலிருந்த வெள்ளி நாண் அனைத்தையும் கழற்றி ஓரளவுக்கு கணக்கை சரிசெய்துவிட்டு தலைகுனிந்தவாறு வருத்தத்துடன் சென்றான்;அவன் சாப்பிட்டது அனைத்தும் நொடிப்பொழுதில் ஜீரணமாகிவிட்டதால் மீண்டும் பசியுடனும் கைகால் நடுக்கத்துடனும் கண்களெல்லாம் குளமாக மதுரை பஸ்ஸில் ஏறினானாம்;
வேதம் சொல்லுகிறது,“உன் பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும் என்று அறிவாயாக “. உலகநீதி சொல்லுகிறது,“முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்” என்று;
இந்த கதையின் நீதி என்னவென்றால்,நாம் இன்றைக்கு செய்யக்கூடிய எந்தவொரு காரியத்துக்கும் ஒரு பின்விளைவு உண்டு;அவை ஒவ்வொன்றும் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்தப்படும்;
இன்றைக்கு அரசாங்கம் மக்களைக் கவர பல்வேறு நலதிட்டங்களையும் இலவசங்களையும் வழங்குகிறது;இலவசம் என்று சொல்லப்படும் எதுவுமே இலவசமல்ல என்பதே உண்மையாகும்;மறைமுகமாக அதற்கான கிரையமானது வேறு வகையில் செலுத்தப்படுகிறது;
இப்படியே இரட்சிப்பும் கிருபையும் முழுவதும் இலவசம் போலிருந்தாலும் அது இலவசமல்ல; “கிரையத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள் ” என்கிறார்,பவுலடிகள்;
எனவே நன்மை தீமை அறியத்தக்க வயதையடைந்த ஒருவன் தனக்காக இல்லாவிட்டாலும் தன் சந்ததிக்காகவேனும் தன்னை சீர்படுத்திக்கொள்ளுதல் நலமாகும்.
எச்சரிக்கை: இந்த கதை அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ‘எந்திரன் ‘ புகழ் ரஜினிகாந்த் சொன்னது .