"விவாகரத்து நடவடிக்கையை எளிமையாக்கும் விதமாக இந்து திருமணச் சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது." - நாளிதழ் செய்தி http://www.dinamalar.com/News_Detail.asp?Id=16636
அண்மையில் ஊடகங்களில் வெளியான இந்த செய்தி பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது;
காரணமின்றி பிரிந்துச் செல்லும் மனைவியை சாந்தப்படுத்தி மீண்டும் இணைந்து வாழ எண்ணும் கணவனுக்கும்
தம்முடைய பிள்ளைகள் எந்த ஒரு சவாலையும் மேற்கொண்டு வெற்றிகரமான குடும்ப வாழ்வை நடத்த எண்ணும் மூத்த தம்பதியருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்திருக்கும்;
தொல்லை தரும் குடிகார சோம்பேறி கணவனிடமிருந்து சீக்கிரம் விடுதலை பெறமுடியுமே என சில பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு இந்த செய்தி நிம்மதியாகவும் இருந்திருக்கும்;

இறைவன் இணைத்ததை மனிதன் பிரித்தல் கூடாது என்று விவிலியம் (Holy Bible) கூறுகிறது;
“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை, இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே, தேவன் அன்று” என்று கவிஞன் பாடினான்;
ஆனால் இன்றோ மணமேடைகள் பணமேடைகளாவதும் இயலாமையினால் அதுவே பிணமேடைகள் ஆவதும் பெருகிவிட்டது;மனிதனுக்காகவே வசதிகளே தவிர வசதிகளுக்காக மனிதன் அல்ல;
இந்த சூக்ஷமத்தையறியாத மனிதனோ சின்ன சின்ன விஷயங்களைக் கூட தன்னளவில் சரிசெய்துக் கொள்ள இயலாமல் பொதுவில் வைத்து விவாதித்து உறவுகளை கசப்பாக்கிக் கொண்டு விலகிச் செல்ல தீவிரிக்கிறான்;
இதற்கு உதவியாக அரசாங்கமும் பல்வேறு வசதிகளைச் செய்துகொடுத்திருக்கிறது;அதில் ஒன்று தான் விவாகரத்து என்பது;அதிலும் குழந்தைகளின் எதிர்காலம் கருதியும் மனமாற்றத்தை எதிர்ப்பார்த்தும் கொடுக்கப்பட்ட இடைவெளி காலம் இன்னும் குறைக்கப்பட்டு சீக்கிரமே பிரிந்துச் செல்ல உதவியாக சட்டம் திருத்தப்படுகிறது;
இது சரியா, தவறா என்பதை மக்கள் மன்றமே முடிவுசெய்யவேண்டும்;ஏனெனில் குடும்ப அமைப்புக்கும் சமுதாய கட்டமைப்புக்கும் உலகுக்கே வழிகாட்டியாக விளங்குவது இந்திய சமூகங்கள் தான்;அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட இந்தியாவிலேயே இந்து திருமணச் சட்டத்தில் விவாகரத்து செய்யும் உரிமையினை எளிமைப்படுத்த அரசாங்கம் முடிவெடுக்கிறதெனில் என்ன அர்த்தம்? குடும்ப அமைப்பும் கணவன் மனைவி இடையிலான ஆரோக்கியமான உறவும் சீர்கெட்டு வருகிறது என்று கொள்ளலாமா?
இதனை மாற்ற என்ன செய்யவேண்டும்..?
யோசிப்போம்..!