விஜயா கடந்த ஒரு மாதமாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுடைய வேலைக்காரி தனது மகளுடைய பிரசவத்துக்காக ஊருக்குச் சென்றவர்கள் இரண்டு மாதமாகியும் இன்னும் வந்துசேரவில்லை;
இந்நிலையில் இன்று கணவனுடைய வற்புறுத்தலின் காரணமாக LIC முகவர் பயிற்சிக்காகச் சென்றாகவேண்டும்; அது பிடிக்காததுடன் வீட்டையும் பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளை யார் கவனித்துக் கொள்ளுவார்கள் என்று கவலை..!
முதலில் அவர்கள் LIC முகவர் பணிக்குச் செல்லுவது ஒருவகையில் அவர்களுடைய தனிமை உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக இருக்கும் என்று சொல்லி அதற்காக அவர்களை ஆயத்தப்படுத்தினேன்; இதன்மூலம் நீங்கள் சுதந்தரமாக வெளியே செல்லவும் அதினால் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் அநேகருக்கு ஆண்டவருடைய அன்பைப் பகிர்ந்துக் கொள்ளவும் முடியும் என்று சொன்னதும் சந்தோஷப்பட்டார்கள்; ஆனால் இன்னும் வேலைக்காரி வராததைக் குறித்துத் தொடர்ந்து அரற்றிக் கொண்டேயிருந்தார்கள்;
திடீரென்று நேற்று போன் செய்த போது பயத்துடனே (தொல்லை..?!) போனை எடுத்தேன்; எடுத்தவுடனே வழக்கம்போல, “ஐயையோ, தூங்கறீங்களா, தொல்லைபண்ணிட்டேனா” எனவும் நான் சற்று கோபத்துடன் “பரவாயில்லைமா, விஷயத்தைச் சொல்லுங்க” என்றதும் மிகச் சாதாரணமாகச் சொன்னார்கள், “போன வெள்ளிக்கிழமை வேலைக்காரி வந்துட்டாங்க, இன்றைக்கு முகவர் பயிற்சிக்காகச் செல்கிறேன், ஜெபித்துக் கொள்ளுங்கள்”
என்றதும் நான் சற்று கண்டிப்புடன் சொன்னேன், “நான் முன்பே சொன்னேனல்லவா, நீங்கள் கவலைப்பட்டதெல்லாம் வீணாகிப்போனதே, இப்போதாவது ஆண்டவரை நம்புவீர்களா, அவருக்கு எல்லாம் தெரியுமல்லவா, எனவே சொல்லுகிறார், ‘ தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள் ‘ என்று; மரியாள் அதைக் குறித்து தெளிவாக அறிந்திருந்தாள்;
நாம் கூட ஒரு பல்பொருள் அங்காடிக்குச் செல்லுகிறோம், அங்கே இருக்கும் அனைத்து பொருட்களையும் வாங்க முயற்சிப்போமா, நமக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்ளுகிறோம்;
இப்படியே நமது அன்றாட வாழ்விலும் நமக்கு துன்பத்தைத் தரக்கூடிய நமது சக்திக்கு மீறிய காரியங்களைக் குறித்து கவலைப்படுவதை விட்டு விட்டு ஆண்டவருடைய செயல்பாட்டுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்துவிட்டு நம்பிக்கையுடன் அமர்ந்திருக்க வேண்டும்” என்று கூறினேன்.
